Tuesday, August 10, 2021

மோடிக்கு எதிராக அரசியலில் கால் பதிக்கும் பிரசாந்த் கிஷோர்


 இந்தியப் பிரதமர் மோடிக்கு சவால் விடும் அரசியல் தலைவர்கள் எவரும் இந்திய அரசிய‌லில் இல்லை என்பதால் பாரதீய ஜனதாக் கட்சியில் பலம் கூடிக்கொண்டே போகிறது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் பாரதீய ஜனதாவில் சேர்ந்துள்ளனர்

காங்கிரஸ், பாரதீய ஜனதா, கொம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு இந்தியாவின் சகல மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. ஆனால், பாரதீய ஜனதக் கட்சிக்கு உள்ள செல்வாக்கு ஏனைய கட்சிகளுக்கு இல்லை.

ராகுல் காந்திக்குப் பின்னர்  காங்கிரஸில் செல்வாக்கும், ஆளுமையும் மிக்க தலைவர் உருவாகவில்லை. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, மன்மோகன் சிங்கின் ஆலோசனை ஆலோசனை வழங்கினார். ராகுல் காந்தி தலைவரான  பின்னர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத்தொடங்கியது. அந்தச் சரிவு கட்சியை  அதல பாதாளத்தில் வீழ்த்தியுள்ளது.

வாஜ்பாயின் தலைமை பாரதீய ஜனதாக் கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றியது. மூத்த தலைவர் அத்வானி அவருக்குத் துணையாக இருந்தார்.வாஜ்பாய்குப் பின்னர் கட்சியை அத்வானி வழிநடத்துவார் என்ற எதிர பார்ப்பு இருதபோது குஜராத்தில் இருந்து புறப்பட்ட மோடி, பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரானார்.  மோடிக்குப் பக்கபலமாக அமித் ஷா செயற்படுகிறார். செல்வாக்கு மிக்க தலைவர்களான மம்தா பானர்ஜி,சரத் பவார் போன்றவர்கள்  காங்கிரஸுடன் இனைந்து செயற்படாமையினால் பாரதீய ஜனதாக்  கட்சியை வீழ்த்த முடியவில்லை. இந்திய  பாராளுமன்றத் தேர்தலின் போது எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாததால் பாரதீய ஜ‌னதாக் கட்சி   மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்திய எதிர்க் கட்சிகளை  ஒன்றிணைக்கும் வேலையை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த்  கிஷோர் கையில் எடுத்துள்ளார்.தேர்தல் காலங்களில் பல கட்சிகளுக்கு ஆலோசகராக செயற்பட்டதால் இந்திய அரசியல் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்ற‌திலும் பிரசாந் கிஷோருக்கு பங்கு  உள்ளது.2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதாக் கட்சியின்   தொழில்முறை தேர்தல் ஆலோசகராகக் கடமையாற்றினார்.

பீகாரில் உள்ள போஜ்புரி பேசும் பகுதியைச் சேர்ந்த 44 வயதான பிரசாந்த் கிஷோர், தனது தொழில்சார் சேவைகளை, நரேந்திர மோடி, நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, பஞ்சாபில் க‌ப்டன் அமரீந்தர் சிங், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழ்நாட்டில்  மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இதுவரை அளித்துள்ளார்.பிரசாந் கிஷோரின் ஆலோசனையால் அந்தத் தலைவர்கள் தேர்தலில்  வெற்றி பெற்றார்கள். பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை காங்கிரஸ் கட்சி  முழுமையாகக் ஏளாமையால் உத்திரப்பிரதேசத்தில் தோல்வியைச்  சந்தித்தது.

கடந்த மே மாதம் 2 ஆம் திக‌ ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், தான் தொழில்முறை அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார், அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற ஊகங்கள் அதன் பிறகு வலுப்பெற்றன.அவர் அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எப்போதுமே உள்ளது. பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசகரா அல்லது அரசியல்வாதியா என்பது குறித்து எப்போதுமே தெளிவு இருந்ததில்லை.

மம்தா பார்னஜி, சரத்பவார், சோனியாகாந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்ததால் மோடிக் கு எதிராக அவர் வியூகம் அமைககூடும் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களிடம் எழுந்தது. 2024 ஆம் ஆண்டு இந்திய  பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு எதிராக, எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க அவர் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின. சரத் பவார், காங்கிரஸ் தலைவர்களுடனான அவரது சந்திப்புகள் என்பனவற்றால் ஊகங்கள்  செய்தியாக உருவெடுத்துள்ளன.

2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய  பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும்,  ஏனைய  அரசியல் கட்சிகளும்,  'பாஜகவை அகற்ற வேண்டும்' என்ற ஒருமித்து குரல் எழுப்பின. ஆனால், எதிர்க் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படாமையினால் பாரதீய ஜனதாக கட்சியை அகற்ற முடியவில்லை.  ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் மட்டுமே கூறியிருந்தார்.  ஏனைய தலைவர்கள் கள்ள மெளனம் சாதித்தனர். எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பிரதமராகும் ஆசை உள்ளது. ஆகையால், அவர்களுக்கிடையிலான  ஒற்றுமை  தொலை தூரத்தில் உள்ளது.

"பிரசாந்த் கிஷோர் ஒரு தேர்தலில் வலதுசாரிக் கட்சியின் பக்கம் இருந்தார். மற்றொரு தேர்தலில், அவர் மற்றொரு சித்தாந்தத்தின் பக்கம் இருந்தார். ஒருமுறை அவர் தமிழ் கட்சியின் பக்கம் இருந்தார். மற்றொரு முறை அவர் ஒரு தெலுங்கு கட்சியுடன் கூட்டாக இருந்தார். யாராலும் புரிந்துகொள்ள முடியாதவராக இருக்கிறார் பிரசாந்த்  கிஷோர்.

2011ம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக்கை ஆரம்பித்தார். இந்த ஐபேக் நிறுவன ஒன்பது தேர்தல்களில் அரசியல் கட்சிகலுக்கு ஆலோசனை வழங்கியது. பிரசாந்த் கிஷோர் எந்த கட்சிக்கு ஆதரவாக இருந்தாரோ அவை 8 தேர்தல்களில் வெற்றி பெற்றன. 2012ஆம் ஆண்டு குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலின்போது பாஜகவுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். நான்காவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பொறுப்புக்கு வந்தார். பல கட்சிகளுக்கும் பணி அவரது பணியால் கவரப்பெற்ற நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு தேசிய அளவில் பாஜகவுக்கு வியூகம் அமைக்கும் பொறுப்பை அவருக்கு வழங்கினார். அந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன்   நரேந்திர மோடியால் மத்தியில் ஆட்சி பிடம் ஏறினார். பிரசாந்த் கிஷோர் சார்ந்து இருந்த பாஜக இந்த சாதனையை படைத்தது. நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார்.


பிரசாந்த் கிஷோருக்கு கட்சி வேறுபாடுகள் எதுவும் கிடையாது. 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில பொதுத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு ஆலோசனை வழங்கினார். 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, 2020 ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்,, 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு, 201 ஆம் ஆன்டு தமிழகத்தில் ஸ்டாலினுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பிரசாந்த் கிஷோர் உடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் குறித்து சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதற்கு விரும்புவதாக ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.

பிரசாந்த் கிஷோரின்  சேவை தங்களுக்கு தேவை என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. எனவே அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதை பாரதீய ஜனதாக் கட்சி  உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனால் ஏதாவது பாதிப்புஏற்படுமா என பாரதீய ஜனதாக் கட்சி ஆய்வு செய்கிறது.

பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 2017 தேர்தலில் அமரீந்தர் சிங்கிற்காக பிரசாந்த் கிஷோரின் அணி பணியாற்றியது. வரும் தேர்தலிலும்  முதல்வர்  வேட்பாளராக  க‌ப்டன் அமரீந்தர் சிங் போட்டியிட உள்ளார். கடந்த மார்ச் மாதம் பிரசாந்த் கிஷோரை தனது முதன்மை ஆலோசகராக  அமரீந்தர் சிங் நியமித்திருந்தார்

இந்நிலையில் பஞ்சாப் முதல்வருக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார் பிரசாந்த் கிஷோர். அதில் “பொது வாழ்க்கையில் இருந்து தற்காலிக இடைவெளி எடுக்கும் எனது முடிவால், உங்கள் முதன்மை ஆலோசகர் பொறுப்பை என்னால் ஏற்க இயலவில்லை.

எனது எதிர்கால நடவடிக்கை குறித்து நான் இன்னும் முடிவு செய்யாததால், இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்பொறுப்புக்கு என்னை கருத்தில் கொண்டதற்கு நன்றி என கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் இனைந்து ஏனைய கட்சிகளை ஒன்றிணைப்பாரா அல்லது  எந்தக் கட்சியிலும் சேராமல் வெளியே இருந்து  எதிர்க் கட்சிகளை ஓரணியில் சேர்ப்பாரா எனத் தெரியவில்லை.

No comments: