Saturday, August 7, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்


 விளையாட்டுப் போட்டியின் போது விபத்து ஏறப்ட்டு வீரர்கள் காயமடைவதுண்டு. சில வேளையில் பார்வையாளர் காயமடைந்த சந்தர்ப்பங்கள் உண்டு. டோக்கியோ ஒலிம்பிக்கில்  விளையாட்டு  வீரர் ஒருவர் வீடியோ படப்பிடிப்பாளரை மோதித்தள்ளிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

டோக்கியோவில் புதிதாகச்  சேர்க்கப்பட்ட போட்டிகளில் ஸ்கேட்போர்டிங்கும் ஒன்று.ஸ்கேட்போர்டிங்கின் அபாயங்கள்  பற்றி விளையாட்டு வீரர்களுக்கு நன்கு தெரியும். கரணம் தப்பினால் மரணம் போன்ற விளையாட்டு.  நான்கு  சில்லுகள் உள்ளசிறிய பலகையில்  சாதிரியமாக இலக்கை அடையும் விளையாட்டு. உயரமான தடைகள், படிகள், தடிகள் போன்றவற்றைக் கடந்து விளையாடும் போட்டி.

அவுஸ்திரேலியாவின் 17 வயதான கிரன் வூலி, போட்டியாளராகக் கலந்துகொண்டார். உடம்பை வளைத்து,இருந்து,எழும்பி தனது திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார். அப்போது  அந்தப் போட்டியைப் பதிவு செய்த  வீடியோ படப்பிடிப்பாளர் மீது எதிர்பாராத விதமாக  கிரன் வூலி மோதினார்.

வீடியோ  படப்பிடிப்பாளரை மோதித் தள்ளிய  கிரன் வூலி அதிர்ச்சியுடன் தலையில் கையை வத்தார்.  பின்னர் மன்னிப்புக் கேட்டார். ஆனால், கடமையே  கண்ணான படப்பிடிப்பாளர் நிலத்தில் படுத்துக்கொண்டு  கட்டை விரலை உயர்த்தி தனது கடமையைச் செய்தார். தனது கமரா சேதமடையவில்லை என்பதை தெரியப்படுத்தினார். பொதுவாக ஸ்கேட்போர்டர்கள் தான் இரத்தம் தோய்ந்து காயமடைகிறார்கள். அதிர்ஷ்டவசமாக கிரன் வூலி காயமடையவில்லை.

விபத்துக்குள்ளான போதிலும், வூலி தொடர்ந்து விளையாடி  82.69 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப்  போட்டிக்குத் தகுதி பெற்றார்.இறுதிப் போட்டியில்  கிரன் வூலி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இன்னொரு அவுஸ்திரேலியரான  கீகன் பால்மர் தங்கம் வென்றார்.பிறேஸிலின் பெட்ரோ பீரோஸ் வெள்ளியையும், அமெரிக்காவின் கோரி ஜுனே வெண்கலத்தையும் பெற்றனர்.

No comments: