Saturday, October 23, 2021

அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்துக்கு சவால் விடும் சசிகலா


 

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டி வளர்க்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பலம் மிக்க தலமைத்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் செல்வாக்குடன் எம்.ஜி.ஆர் கட்சியை வழி நடத்தினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்  ஜெயலலிதாவின் ஆட்சியில் கழகத்தின் அடுத்த தலைவர்கள அனைவரும் கலக்கத்தில் பதவியைப் பற்றிப்  பிடித்துக் கொண்டிருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் தூக்கி எறியப்படுவது வாடிக்கையானது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பதவி ஆசையால் சசிகலா  முதல்வராக முயபன்றார். அவர் சிறைக்குச் செல்லும்போது, பன்னீரிடம் இருந்த முதல்வர் பதவியை எடப்பாடியிடம் கையளித்துவிட்டுச் சென்றார். பதவி தந்த போதை எடப்பாடியின் தலையிலேறியதால் பழையவற்றை மறந்து விட்டார். பதவிப் போட்டியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டைத் தலைமையில் இயங்குகிறது.

எடப்பாடியும் , பன்னீரும் ஆளுக்கொரு பக்கம் கட்சியை இழுத்துச் செல்ல முயற்சிக்கும்போது சிறைவாசம் முடிந்து வெளிவந்த சசிகலா கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றார்.சசிகலாவை எதிர்ப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்ச்செல்வமும்  ஒன்றாகக் குரல் கொடுக்கின்றனர்.  

அண்ணா திராவிட முன்னாற்றக் கழக்த்தின் பொன்விழா எடப்பாடி பழனிச்சாமி ,பன்னீர்ச்செல்வம்  ஆகியோரின்  தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொன்விழாவைக் கொண்டாடினார்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடி  கட்டிய காரில் பவனி வந்த சசிகலா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்ககுக்குச் சவால் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் என்ற  கல்வெட்டையும் சசிகலா திறந்து வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆரால் 1972 ஆண்டு அக்டோபர் 17ம் திகதி அதிமுக தொடங்கப்பட்டது. அக்கட்சி தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனையொட்டி அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை நடப்பாண்டு முழுவதும் அக்கட்சியின் தலைமை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா  ஆகியோரின்  திருஉருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி அலுவலகத்தில் குவிந்த ஏரளமான தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நமது அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள பொன்விழா சிறப்பு மலரை இருவரும் வெளியிட்டனர்.


 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொன்விழாவை முன்னிட்டு தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்லப் போவதாகக் கிளப்பி விடப்பட்ட புரளியால்   கிலியடைந்த கழகத்தினர்  அவரைத் தடுப்பதற்குத் தயாராக இருந்தனர்.

  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.   சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏராலமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

 சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்ற சசிகலா மரியாதை செலுத்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடி  கட்டிய காரிலேயே சசிகலா மெரினா சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தின் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் இரு கைகளை கூப்பி நின்றவர், மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ``4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தினை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்திவிட்டேன். அம்மாவும், தலைவரும் நிச்சயம் அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் காப்பாற்றுவார்கள் என்றார். ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை  ஓங்கி அடித்துவிட்டு சிறக்குச் சென்றவர் சசிகலா .

பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்குசென்ற சசிகலா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடியை ஏற்றி   எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செய்தார்.

இதையடுத்து கல்வெட்டு ஒன்றையும் சசிகலா திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா' என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே  கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டத்திற்கு விரோதமானது என  விமர்சனங்கள்  வெளியாகும்  நிலையில் தற்பொழுது இந்த கல்வெட்டு மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவு, சசிகாஅவின் சிறைவாசம் ஆகியவற்றுக்குப் பின்னர்  பதவிப் போட்டியால் பொதுச் செயலாளர் என்ற பதவி ஒழிக்கப்பட்டு விட்டது.  இப்போதும் தாந்தான் கழகப் பொதுச் செயலாளர் என சசிகலா  உரிமை கோருகிறார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கழகத் தலைவர்கள் வெறும் அறிக்கையுடன் தமது கடமை முடிந்து விட்டதென நினைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  அரசியல் வரலாற்றையே கேள்விக்குள்ளாக்கிவிட்டார். அவரது ஆட்சியில் மக்கள் நலனும் இல்லை. சுயமாக முடிவெடுக்கப்படவும் இல்லை. எத்தனை நாட்கள் ஆட்சியில் இருப்போம் என்ற சந்தேகத்தோடுதான் ஆட்சியே அமைத்தார். அதில் என்ன கிடைத்தாலும் லாபம்தான் என்ற நோக்கில்தான் இயங்கினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலம் மட்டுமே மக்கள் நலன் சார்ந்து நடந்த ஆட்சியாக இருந்தது.


எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவரிடமும் துணிவான செயற்பாடு எதுவும் இல்லை. மோடி,அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டலில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்குகின்றதோ என்ற சந்தேகம் உள்ளது.

எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் தமிழகத்தின் பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.  அதே போன்று கருணாநிதியும், ஸ்டாலினும் தொகுதிமாறி போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்ச்செல்வமும் தொகுதிமாறி போட்டியிட  முன்வரமாட்டார்கள்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொன்விழா  தொண்டர்கள் எதிர் பார்த்ததுபோல்  சிறப்பாக நடைபெறவில்லை. அறிக்கையில் மட்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றுவேன் என சசிகலா அறிவிக்கிறார். அதேவேளை, ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் எனவும்  வேன்டுகோள் விடுக்கிறார். கழகத்தை  சசிகலாவின் அகியில் கொடுத்தால் அது மன்னார் குடியின் சொத்தாகிவிடும் என்பதை எடப்பாடியாரும், பன்னீரும் நன்கு அறிவார்கள். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். கருணாநிதியும், ஜெயலலிதாவும் படு பயங்கரமாகத் தோற்றபின்னர் பெரு வெற்ற பெற்று ஆச்சரியப்பட வைத்தனர். அப்படி ஒரு வெற்றியை இன்றைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பெற முடியாது.

No comments: