Saturday, October 30, 2021

மகனுக்கு மகுடம் சூட்டிய வைகோ; அதிருப்தியாளர்கள் வெளியேற்றம்


 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தந்து மகன்  துரைக்கு முக்கிய பதவையை வைகோ வழங்கியதால் உருவான எதிர்ப்பு காரணமாக முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர். மகனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவர்களின் பதவியை வைகோ பறிக்கிறார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக  முக்கிய பிரசாரப் பீரங்கியாகத் திகழ்ந்தவர் வைகோ. அப்போது தலைவர் கருணாநிதிக்கு சேரும் கூட்டத்துக்கு இணையாக வைகோவின் பேச்சைக் கேடக் கூட்டம் திரண்டது. வைகோவின் வளர்ச்சி கருணாநிதிக்கு கலகக்த்தை உருவாக்கியது.வைகோவை வெளியேற்ற தக்க தருணத்தை எதிர் பார்த்திருந்த கருணாநிதி பொய்க் குற்றச் சாட்டை சுமத்தி அவரை வெளியேற்றினார்.




கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு தான் தடையாக இருப்பதால் கழகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதாக வைகோ தெரிவித்தார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் புதுக் கட்சியை வைகோ ஆரம்பித்தார். திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் வைகோவுடன்  வெளியேறினார்கள். வைகோவுக்கு ஆதரவாக எட்டுப் பேர் தீக்குளித்தனர். வாரிசு அரசியல் காரணமாகதிராவிட முன்னேற்றக்      கழகத்தில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதால் தனது கட்சிக்குள் வாரிசு அரசியல் இருக்காது எனச் சபதம் செய்தார்.

வைகோவின் பேச்சைக் கேட்பதற்கு பெரும் கூட்டம் சேர்ந்தது. ஆனால், அவரது கட்சிக்கு வாக்களிக்க அதிகமானோர் தயாராக இல்லை எனபதை தேர்தலின்போது அவர்  தெரிந்துகொண்டார். ஜெயலலிதாவுடனும், கருணாநிதியுடனும் மாறிமாறி கூட்டணி சேர்ந்தார் வைகோ. மூன்றாவது அணியையும் உருவாக்கிப் பார்த்தார். தேர்தல் வெற்றி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.  தேர்தல்களின் போது வாக்கு வீதம் குறைந்ததால் அவரது கட்சிச் சின்னமான பம்பரம் அங்கீகாரம் இழந்தது. ஸ்டாலின் தலைமையிலான  திராவிட முன்னேற்றக் கழக‌க் கூட்டணியில்  உதயசூரியன் சின்னத்தில்  வைகோவின் கட்சியினர் போட்டியிட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியால் வைகோ நாடாளுமன்ற  உறுப்பினராக இருக்கிறார்.

வைகோ மகன் துரைக்கு, தலைமை நிலையச் செயலர் பதவி வழங்கிய கூட்டத்தை, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, எட்டு மாவட்டச் செயலர்கள் உட்பட, 18 முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்துள்ளனர். கழக‌ மாவட்டச் செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம், சென்னையில்   நடந்தது. அதற்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்திருக்க வேண்டும். ஆனால், அவர் பங்கேற்கவில்லை. துரைக்கு பதவி வழங்க, எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவரைத் தொடர்ந்து, உயர்நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், 18 பேர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.

துரைக்கு, கட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  இளைஞரணி மாநில செயலர் ஈஸ்வரன், அக்கட்சியல் இருந்து விலகியதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரை தொடர்ந்து, கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலர் சம்பத் குமாரும் விலகி விட்டதாக, வைகோவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

வைகோவின் மகன் துரை வையாபுரி என்ற துரை வைகோவுக்கு அக்கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்கலாம். இதற்கு தாங்கள் அனைவரும் ஒப்புதல் தெரிவிப்பதால் இரகசிய வாக்கெடுப்பு எதுவும் நடத்த வேண்டாம் என்று வைகோவிடம் கட்சியின்  மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர்.துரை வைகோவிக்கு பதவி வழங்குவதை முன்னிட்டு  "வெற்றி திருமகனே துரை வைகோ" என்ற அடைமொழியுடன் பிரமாண்ட சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளன.  நிர்வாகிகலின் ஆலோசனையை மீறி துரை விகோவுக்கு துரைக்கு, தலைமை நிலைய செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏற்காத நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக போராட்டங்க‌ளில்  பங்கேற்ற அவர்கள் பலமுறை சிறக்குச் சென்றுள்ளனர். வைகோவின் பெயர்  பிரபலமடைந்ததுபோல மற்றவர்களின் பெயர் பிரபலமாகவில்லை.

கட்சியை உடைக்கிற நோக்கம் எனக்கு இல்லை என அக்கட்சியிலிருந்து விலகிய, மாநில இளைஞரணி செயலர் ஈஸ்வரன் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"இப்போதைக்கு அடுத்த தலைவர் யார் என்ற தேவையும், அவசியமும் இல்லை. அதை காலமும் சூழ்நிலையும் தான் தேர்ந்தெடுக்கும். தனிப்பட்ட துரை மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. தலைவர் மகன் அரசியலுக்கு வரலாம்; பதவிகளை பெறலாம். ஆனால், அவர் தான் வழிநடத்தி செல்வார் என்பதை தான் எதிர்க்கிறேன். எனவே, இனி ம.தி.மு.க.,வில் பயணிக்க விரும்பவில்லை. அதேசமயம் ம.தி.மு.க.,வை உடைக்கிற நோக்கம் எனக்கு இல்லை. அரசியலை துாய்மைப்படுத்த,வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க, சமூக மாற்றங்களை ஏற்படுத்த, எனக்கு ஒரு களம் தேவைப்படுகிறது. மக்கள் பணிகளை செய்யவும், அரசியல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், 'மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவக்க உள்ளேன். இதில் ம.தி.மு.க.,விலிருந்து வெளியேறும் அதிருப்தியாளர்களும் இணைந்து பணியாற்றலாம்"  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரைக்கு ஆதரவு கடிதம் தராத நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறிக்கும் படலம் தொடர்கிறது.முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரைக்கு, சமீபத்தில், தலைமை நிலைய செயலர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்து, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களிடம் கடிதம் கேட்கப்படுகிறது.கடந்த 20ம் திக‌தி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தை, 18 நிர்வாகிகள் புறக்கணித்தனர். அவர்களிடமும் துரைக்கு ஆதரவு கடிதம் கேட்டு, நெருக்கடி அளிக்கப்படுகிறது.

ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலருமான டி.என்.குருசாமி, 20ம் திக‌தி கூட்டத்திற்கு சமுகமளிக்க‌வில்லை.இதனால்,  அவரிடமிருந்த மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் உயர்நிலை குழு உறுப்பினர் பதவி மட்டும் உள்ளது.இது குறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'நாமக்கல் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.'கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேகர், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கே.கே.கணேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.குருசாமியின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், அம்மாவட்ட ம.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், துரைக்கு ஆதரவாக கடிதம் கேட்டு நெருக்கடி தரப்பட்டுள்ளது. ஆனால், அவர் தரப்பில் ஆதரவு கடிதம் தர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அவரது பதவியும் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.துரைக்கு ஆதரவு கடிதம் தராமல் இழுத்தடிக்கும் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பதவி பறிப்பு தொடரும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலமாக, வைகோவின் கட்சியில் கொள்கை பரப்பு செயலராக இருந்த சம்பத், பொதுச் செயலர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகினார்.கடந்த, 2012ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்தில்  இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவியுடன், 'இன்னோவா' காரையும் பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா, தினகரனை ஆதரித்தார். பின், தினகரனிடம் இருந்து விலகி, இனி இலக்கிய கூட்டங்களில் மட்டும் பங்கேற்க போவதாக அறிவித்தார். சட்டசபை தேர்தலில், திராவிட முன்னேர்றக் கழக, கூட்டணியை ஆதரித்து பேசினார்.

இதுவரை எந்த ஒரு கட்சியிலும் சேராமல் இருக்கும் சம்பத், வைகோ மகன் துரைக்கு ம.தி.மு.க.,வில் பதவி வழங்கியதற்கு ஆதரவாக பேசி வருகிறார்.துரையை கட்சித் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டால், அந்த முடிவை மக்களும் ஏற்றுக் கொள்கிற நிலைமைக்கு காலம் கொண்டு வந்து நிறுத்தும். ம.தி.மு.க., ஆயுள் முழுதும் போராடுவதற்காக பிறந்த கட்சி. தேர்தல் களத்தில் தோல்வி கண்டிருக்கலாம்; ஆனால், போர்க்களத்தில் வென்றிருக்கிறது. இது, வாரிசு அரசியல் அல்ல; வரலாற்று அரசியல்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில், 'நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.க.,வில் இணைய வேண்டும்.'அவருக்கு துணைப் பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும். துரைக்கு உறுதுணையாக சம்பத், பிரசார பீரங்கியாக வலம் வருவார்' என, கட்சியினர் பதிவிட்டுள்ளனர்.மீண்டும் ம.தி.மு.க.,வில் சம்பத் இணைவதற்கு, வைகோ அழைப்பு விடுப்பார் என, அக்கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நிலையச் செயலர் பதவி வழங்கப்பட்ட துரை,  சென்னை தாயகத்தில் பொறுப்பேற்றார். நிர்வாகிகளுக்கு துரை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'எனக்கு சால்வைகள், பட்டாடைகள் அணிவிக்க வேண்டாம். மரக்கன்றுகள் அல்லது நீட், டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு புத்தகங்கள் வழங்குங்கள். அவற்றை கிராம மாணவர்களை சந்தித்து வழங்க உள்ளேன். முன்னேற்ற அரசியலுக்கான முதல் படி, நுால் படி என்பதே' என, கூறியுள்ளார்.இதற்கிடையில், துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாவட்ட மாணவர் அணி செயலர் சாஜி விலகி உள்ளார்.

தன்னுடன்  இணைந்து கட்சியை வளர்த்த நிர்வாகிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மகன் துரையை தனது அரசியல் வாரிசாக வைகோ அறிவித்துள்ளார். பலர் விலகிவிட்டனர். புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக ஒருவர் அறிவித்துள்ளார். அரசியலில் அனுபவம் மிக்க வைகோவால் கட்டிக் காப்பாற்ற முடியாத கட்சியை துரை வைகோ எப்ப‌டி தூக்கி நிறுத்தப் போகிறார்.

No comments: